வேளாண்மைப் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இளங்கலை வேளாண்மைப் படிப்புகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இளங்கலை வேளாண்மைப் படிப்புகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து, கலந்தாய்வு நடத்தப்படும். இதற்காக மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 6 அறிவியல் பட்டப் படிப்புகள், 6 தொழில்நுட்ப பட்டப் படிப்புகள் என மொத்தம் 12 பட்டப் படிப்புகளை 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக வழங்குகிறது.
இதில், உறுப்புக் கல்லூரிகளில் 1,262 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் 2,160 இடங்கள் என மொத்தம் 3,422 இடங்கள் உள்ளன.
இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் மூலமாக சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் முறையில் (ரரர.பசஅம.அஇ.ஐச/அஈஙஐநநஐஞச.ஏபஙக) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலமாக மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான (முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின்
சந்ததியினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்) சான்றிதழ் சரிபார்ப்பு
ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரையில் நடைபெறும். அப்போது, தேவையான சான்றிதழ்களை நேரில் கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்த பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் (கிரெடிட் கார்டு, சேமிப்புக் கணக்கு அட்டை) மூலமாகச் செலுத்தலாம். இந்த வசதி இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலுத்துச் சீட்டு கொண்டு (சலான்) எந்தவொரு ஸ்டேட் வங்கிக் கிளையிலும் செலுத்தலாம்.
முதல் கட்டக் கலந்தாய்வு: சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும். முதல் கட்டக் கலந்தாய்வு இணையதளம் வழியாக ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரையில் நடைபெறும்.
தொழிற்கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதியும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
இரண்டாம் கட்டக் கலந்தாய்வு: இதைத் தொடர்ந்து ஜூலை 23 முதல் 27-ஆம் தேதி வரையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும். இதையடுத்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி கல்லூரிகள் தொடங்கும். ஆகஸ்ட் 31-ஆம் தேதி சேர்க்கை நிறைவுபெறும் என்றார்.