தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால், இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை வெளியேற்ற காவல்துறையினர், தடியடி நடத்தினர். இதில் ஏராளமான கிராம மக்கள் காயமடைந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், காவல்துறையின் தடியடியில் சிக்கி இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதையும், இளைஞர் ஒருவர் காயத்தோடு எழுந்து நடக்க முடியாமல் அலறுவதும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து, அங்கே இருந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கி, கவிழ்த்துப் போட்டனர்.