தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.
புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் வருவாய், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் களம் இறங்கி சேதமதிப்பைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் 417 மையங்களில் 81 ஆயிரத்து 948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்துள்ளார்.
புயலால் ஆயிரக்கணக்கான குடிசைகள் சேதமடைந்துள்ளன. மான்கள், காட்டுப்பன்றிகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் விலங்குகள் உயிரிழந்துள்ளன. இவை இறந்து காரைக்காலில் கரை ஒதுங்கியுள்ளன. இறந்த விலங்குகள் நாகை கோடியக்கரை காட்டில் இருந்து அடித்துவரப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.
இந்நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கஜா புயல் பாதிப்பால் 1 லட்சத்து 27 ஆயிரத்து 448 மரங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயலுக்கு தமிழகம் முழுவதும், 20 ஆண்கள், 14 பெண்கள், 2 குழந்தைகள் என 36 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது. திருவாரூர் - 12, புதுக்கோட்டை - 7, தஞ்சை - 4, நாகை - 4, கடலூர் - 3, திருச்சி - 2, திண்டுக்கல் - 2, சிவகங்கை - 2 பேர் உயிரிழந்தனர்.
கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.