மதுரையில் ரூ.1,200 கோடியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
புதுவைக்கு அரசு முறைப் பயணமாக வந்த மத்திய அவர், புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அங்கு புதுவை மாநில, மாவட்ட, தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்எல்ஏ, நியமன எம்எல்ஏக்கள் கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி, மாநில பாஜக துணைத் தலைவர் ஆர்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மதுரையில் ரூ. 1,200 கோடி செலவில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடிய விரைவில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும். அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் ரூ. 700 கோடி செலவில் நோய்த் தடுப்பு மைய வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடக்கிவைப்பார்.
மேலும், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பல்நோக்கு மருத்துவமனைகளைத் தொடங்க மத்திய அரசு ரூ. 150 கோடி நிதி அளித்துள்ளது என்றார் அவர்.