தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதுôறாக பேசி, முகநூலில் பதிவிட்டதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த அமமுக பிரமுகர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை குப்புசாமித் தெருவைச் சேர்ந்தவர் நூர்முகமது. அதிமுக முன்னாள் நகரச் செயலர். இவரது மகன் அலாவுதீன் (35). இவர் அமமமுகவின் இளைஞர் பாசறை மாநில இணைச் செயலராக உள்ளார். இவர் தனது நண்பரான விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த ஜெகனுடன்(31) சேர்ந்து முகநூலில் பதிவு ஒன்றை அண்மையில் வெளியிட்டார்.
அதில், திண்டிவனத்தைச் சேர்ந்த மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை விமர்சித்தும், தரக்குறைவாகவும் பேசினாராம்.
இது சமூக வலைதளங்களில் பரவியதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் ஆர்.பசுபதி உள்ளிட்டோர், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தனர்.
புகாரை ஆய்வு செய்த காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான போலீஸார், அலாவுதீனை வியாழக்கிழமை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதையடுத்து, இரு கட்சியினரிடையே மோதலைத் தூண்டும் விதத்திலும், தனிநபரை விமர்சித்து அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அலாவுதீன், ஜெகன் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். பின்னர், அலாவுதீன் கைது செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை அக்.4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரித்த நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, விழுப்புரம் கிளைச் சிறையில் அலாவுதீன் அடைக்கப்பட்டார்.