முகப்பு
தமிழ்நாடு

திருவாரூரில் அழகிரி போட்டி?

ஆதரவாளர்கள் விரும்பினால் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

ஆதரவாளர்கள் விரும்பினால் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்தார்.
 திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டி:
 தனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை. ஆதரவாளர்கள் விரும்பினால் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட்டால் அனைவருமே எனக்கு ஆதரவு தெரிவிப்பர்.
 பாஜக, என்னை இயக்குவதாகக் கூறுவது வெறும் வதந்தியே. திமுகவில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். கட்சியில் இதுகுறித்து எதுவும் நேரடியாகப் பேசவில்லை. கட்சியில் இணைத்தால், கட்சியைப் பலப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார் அவர்
 முன்னதாக நடைபெற்ற கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் அழகிரி பேசியது:
 நான் மேடையில் பேசி 4 ஆண்டுகள் ஆகி விட்டன. 1951 ஜனவரி 30-ஆம் தேதி திருவாரூர் தெற்கு வீதியில் பிறந்தேன். எனது தந்தை கருணாநிதி, பெரியாரை அழைத்து வந்து அவரது மடியில் உட்கார வைத்து எனக்குப் பெயர் வைக்கும்படி கூறியுள்ளார். தந்தை பெரியாரும் பட்டுக்கோட்டை மாவீரன் அழகிரியின் பெயரை எனக்கு வைத்தார். எனக்கு திருமணத்தையும் பெரியார் தான் நடத்தி வைத்தார். அந்த திருமணம் ஒரு கலப்புத் திருமணம்.
 திருவாரூருக்கு வரும்போது பழைய நிகழ்வுகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. என்னைப் பற்றி கருணாநிதிக்கு நன்கு தெரியும். அவர் ஒரு புத்தகத்தில் எனக்கு தப்பாமல் பிறந்தது நீதான் என எழுதியுள்ளார்.
 திருவாரூரில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று எனது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நான் தேர்தலில் நின்றால், வாக்கு கேட்கும்போது பொதுமக்களிடம் எனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் கேட்பேன்.
 மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் வைக்க விரும்புகிறேன். திருவாரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும். கீழ்வேளூர் அருகே உள்ள வேளாண் கல்லூரிக்கும் கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும். மத்திய பல்கலைக்கழகத்துக்கும் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றார் அழகிரி.
 நிகழ்ச்சியில், அழகிரியின் மகன் துரை தயாநிதி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.