பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
தஞ்சாவூர் என்றாலே பெரியகோயிலுக்கு அடுத்து நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மைகளே. பிளாஸ்டிக் பொம்மைகள், சீன பொம்மைகளின் வரவால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் உற்பத்தியும், விற்பனையும்
தஞ்சாவூர் என்றாலே பெரியகோயிலுக்கு அடுத்து நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மைகளே. பிளாஸ்டிக் பொம்மைகள், சீன பொம்மைகளின் வரவால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் உற்பத்தியும், விற்பனையும் சரிவைச் சந்தித்து வருகிறது.
தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட 19-ஆம் நூற்றாண்டில் இந்த பொம்மை பிரபலமானது. சரபோஜி மன்னரின் காலத்தில் இப்பொம்மைகள் உருவாக்கும் கலைஞர்கள் சிறப்புடன் மதிக்கப்பட்டனர். இப்படி தஞ்சையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்றாகவும், வாழ்வியலை விளக்குவதாகவும் உள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தஞ்சையின் கலைப் பண்பாட்டுச் சின்னமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க பொம்மைகளுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொம்மைகள் தற்போது தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, கீழ அலங்கம் ஆகிய இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
நவராத்திரியின்போது, பரண் மேல் படுத்திருக்கும் பொம்மைகள் வீட்டின் பூஜையறையில் இடம்பிடிக்கும். ஆனால், இதில் பல காலமாக முக்கிய இடம்பிடித்திருந்த தலையாட்டி பொம்மைகளின் சாம்ராஜ்யம் தற்போது சரிந்து வருகிறது. தற்போது "டான்ஸிங் டால்' எனப்படும் பொம்மைகளை விரும்பி வாங்குகின்றனர். இவை பாரம்பரிய தஞ்சாவூர் பொம்மைகள் அல்ல.
இதனால் பாரம்பரிய தலையாட்டி பொம்மைகளின் விற்பனை மந்தமாக உள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.
சராசரியாக, 7 அங்குல உயரமுள்ள பாரம்பரிய தஞ்சாவூர் தலையாட்டி ராஜா}ராணி ஜோடி பொம்மை விலை ரூ.100. அளவு கூடுவதற்கேற்ப விலை அதிகம். ஆனால் வெறும் 20 ரூபாய் விலையுள்ள பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு அமோக விற்பனை.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் வெளிநாடுகளுக்குப் பயணித்த காலம் போய், தற்போது உள்ளூரிலேயே கேட்பாரில்லை. இதுகுறித்து தஞ்சை மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த பாரம்பரிய தலையாட்டி பொம்மை உற்பத்தியாளர் எஸ். ராஜேந்திர பிரபு கூறியது:
பாரம்பரிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என்பது உருட்டு பொம்மைகளையே குறிக்கும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில், களிமண், காகிதக்கூழ் உள்ளிட்டவற்றைக் கொண்டு பாரம்பரிய முறையில் பொம்மைகளை செய்கிறோம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் வருவோரும், வியாபாரிகளும் தலையாட்டி பொம்மைகளை வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது குழந்தைகளுக்கு ஆபத்தை உருவாக்கும் பிளாஸ்டிக் தலையாட்டி பொம்மைகள், சீன எலக்ட்ரானிக் பொம்மைகளின் வரவால் பாரம்பரிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் விற்பனை சரிவுக்குள்ளாகி, உற்பத்தியும் குறைந்துள்ளது. தற்போது தஞ்சாவூரைத் தாண்டி தலையாட்டி பொம்மைகளை வேறெங்கும் காண முடிவதில்லை.
ஒரு காலத்தில் தஞ்சாவூரில் 300}க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது ஓரிரு குடும்பங்களே இத்தொழிலில் உள்ளனர். பலர் கட்டட வேலை போன்ற மாற்றுத் தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். தலையாட்டி பொம்மை தயாரிப்புத் தொழிலுக்கு கடனுதவி வழங்கி பாரம்பரியமிக்க பொம்மைக் கலை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். பொதுமக்களும் பாரம்பரியமிக்க தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளையே விரும்பி வாங்க வேண்டும் என்றார் அவர்.