சென்னை: ஒரு இந்திய குடிமகனாக ஒரு கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? என்று நதிநீர் இணைப்பு குறித்த ரஜினியின் பேட்டிக்கு குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செவ்வாய் காலை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'நதிகளை இணைப்பதற்காக தனி ஆணையம் அமைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி வரவேற்கத்தக்கது.
நதிகளை இணைத்துவிட்டால் நாட்டில் உள்ள பாதி பிரச்னைகள் குறைந்துவிடும். இதை நான் முன்பே வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போதும் தெரிவித்திருந்தேன். இப்போதும் அதனை ஆதரிக்கிறேன்.
இந்த தேர்தலில் மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இறைவன் அருளால், மக்கள் ஆதரவால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பைத்தான் அவர்கள் முதலில் செயல் படுத்த வேண்டும்.' என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜகவை ரஜினி ஆதரிக்கிறார் என்று ஒரு பேச்சு பரவலாக எழுந்தது.
இந்நிலையில் ஒரு இந்திய குடிமகனாக ஒரு கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? என்று நதிநீர் இணைப்பு குறித்த ரஜினியின் பேட்டிக்கு குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை பற்றி ரஜினிகாந்த் சார் பேசியதை வைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு சப்தம் எழுப்புகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தைப் பேசினார். அதனால் என்ன? ஒரு இந்திய குடிமகனாக ஒரு கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? அதை ஏன் அரசியலாக்க வேண்டும்?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.