தேனி: அதிமுகவினருக்கு சொந்தமான இடத்தில்தான் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை நாடகமாடுகிறது என்று தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் வேட்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்று விதி நடைமுறையில் இருக்கிறது.
அந்த விதியையும் மீறி, தங்கதமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, எங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கவே செய்தியாளர்களை சந்திக்கிறேன். அமமுக அலுவலகத்தில் இருந்து பணம் கைப்பற்றப்படவில்லை. அதிமுகவினருக்கு சொந்தமான இடத்தில் இருந்துதான் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் வருமான வரித்துறையினர் திட்டமிட்டு நாடகமாடுகின்றனர்.
ஓபிஎஸ் மகன், வாக்காளர்களுக்கு ரூ.150 கோடி அளவுக்கு பணம் கொடுத்தது குறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தலை நிறுத்தும் அவசியம் அமமுகவுக்கு இல்லை என்றும் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.