புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றி வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் காரணமாக, திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவில் ஈடுபட்டார்.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நிலவரப்படி 52.02% வாக்குகள் பதிவாகியுள்ளது
இந்நிலையில் புதுக்கோட்டை அருகேயுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றி வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் காரணமாகி, திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருச்சி தொகுதியில் அமமுக சார்பாக சாருபாலா தொண்டைமான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் உள்ள மச்சுவாடியில் 61-ஆம் எண் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு காலையில் துவங்கி வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வந்தது.அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சாருபாலாவின் பெயர் வரிசையில் மாற்றி இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி வைக்குமாறு அந்த கட்சியினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வாறு நடைபெறாத காரணத்தால் அவர்கள் உடனடியாக சாருபாலா தொண்டைமானுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று அவர் தர்ணாவைக் கைவிட்டார்.
இதன்காரணமாக அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.