மதுரை: பணிநியமன முறைகேடுகள் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை.யில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பி.பி.செல்லத்துரை பதவி வகித்தபோது, பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளுக்கு பேராசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்றன. மேலும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பிரிவு உள்ளிட்ட பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இதில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகப்பிரிவு அலுவலர்கள் உள்பட 69 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 69 பேரின் பணி நியமனத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தகுதியற்ற பலர் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்கலைக்கழகத்தில் 69 பேர் பணி நியமன முறைகேடு தொடர்பாக உயர்கல்வித்துறை விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பல்கலைகக்கழக பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்பேரில் விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு விசாரணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி, உறுப்பினர்களாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, தணிக்கையாளர் வீரபாண்டியன் ஆகியோரை நியமிக்க அனுமதி வழங்கியது.
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலை.யில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்களது விசாரணையின் முதல்கட்டமாக 69 பேர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள், பல்கலைக்கழக பணிக்காக வந்திருந்த விண்ணப்பங்கள், அவர்களிடம் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வு ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.