முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இனியும் நீடிக்க என்ன தகுதி இருக்கிறது?: கே.எஸ்.அழகிரி கேள்வி 

தனது கடமைகளில் பெரும் தோல்வியடைந்த  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இனியும் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 14 ஆகஸ்ட், 2019 at 4:19 PM
பகிர்:

சென்னை: தனது கடமைகளில் பெரும் தோல்வியடைந்த  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இனியும் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் அதிக முதலீடுகளைப் பெற்று தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவதற்காக முதலில் ரூபாய் 100 கோடி செலவிலும், பிறகு இரண்டாவது முறையும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முதலீடுகளின் இலக்கு இதுவரை எட்டப்படவில்லை. தமிழகத்தில் நடைபெற்று வருகிற அ.இ.அ.தி.மு.க. அரசு மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை. இத்தகைய தோல்வியின் பின்னணி காரணமாக தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை அழைத்துப் பேசி, அதிக முதலீடுகளை பெறப் போவதாக கூறியிருக்கிறார்.  ஏற்கனவே நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் தோல்வியடைந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் எத்தகைய பலனை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி குன்றிய காரணத்தால் வேலை வாய்ப்பின்மை கடுமையாக உயர்ந்திருக்கிறது என தேசிய புள்ளியியல் மாதிரி ஆய்வக அறிக்கை கூறியிருக்கிறது. தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை எந்தளவுக்கு கடுமையாக தலை விரித்தாடுகிறது என்பதற்கு ஓரிரு உதாரணங்களே போதுமானதாகும். சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் 9351 பிரிவு-4 பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டில் 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கின்றன. ஒரு பணிக்கு 213 மனுக்கள் வந்துள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்தில் 14 துப்புரவு பணியாளர்களுக்கு 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் முதுநிலை பட்டதாரிகள், எம்.பி.ஏ., பி.டெக், எம்.டெக் படித்தவர்கள் மனு செய்திருக்கிறார்கள் என்கிற அவலநிலை வெளிப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தகுதிமிக்க பட்டதாரிகளுக்கு உரிய வேலை கிடைக்காததால் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதைவிட, தமிழக ஆட்சியாளர்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது.

கடந்த காலங்களில் தமிழகத்தில் இயற்கை சீற்றத்தினால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. ஒரு முதலமைச்சர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதுதான் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும். ஆனால், தமிழக முதலமைச்சர் அவர்களோ, ஒக்கி புயலாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கோ, உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடு தருவதற்கோ, மத்திய அரசிடமிருந்து அதிக நிவாரண நிதி பெறுவதற்கோ தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டதில்லை.  தமிழக முதலமைச்சர், நரேந்திர மோடி அரசிடம் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை கேட்ட மொத்த நிவாரண தொகை ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் 4200 கோடி. தமிழக அரசு கேட்டதற்கும், மத்திய அரசு வழங்கியதற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்குமாக உள்ளது. இதை எதிர்த்து பேசுகிற துணிவு எடப்பாடி அரசுக்கு இல்லை.

எனவே, தமிழகத்திற்கு முதலீடுகளை பெறுவதிலோ, தொழில் வளர்ச்சியை பெருக்குவதிலோ, வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதிலோ, மத்திய அரசிடம் அதிக நிதிகளைப் பெற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதிலோ பெரும் தோல்வியடைந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இனியும் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்க விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.