விழுப்புரம் சம்பவம் எதிரொலி: கடலூரில் லாட்டரி வியாபாரிகள் 13 பேர் கைது
விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக, கடலூரில் லாட்டரி வியாபாரிகள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கடலூர்: விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக, கடலூரில் லாட்டரி வியாபாரிகள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழக அரசால் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டபோதிலும் பல்வேறு வகைகளில் லாட்டரி விற்பனை, குலுக்கல் நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட விழுப்புரம் நகைத் தொழிலாளி தனது 3 மகள்களைக் கொன்று, மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் லாட்டரி வியாபாரிகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'டலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 291 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் 104, கடலூர் 98, நெய்வேலி 27, சேத்தியாத்தோப்பு 25, பண்ருட்டி 20, விருத்தாசலம் 9, திட்டக்குடி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.3.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், லாட்டரி சீட்டு விற்பனை சம்பந்தமாக பொதுமக்கள் 90873 00100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.