செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமனம் செய்யப்படுவார் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே, செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான முதல்வர், நிறுவனம் முழு வீச்சில் செயல்பட மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மத்திய அரசு ரூ8 கோடி நிதி ஒதுக்கவேண்டி உள்ளது. நிதி ஒதுக்கியதும் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் 3 மாதத்தில் அமைக்கப்படும். மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமிக்கப்படுவார். மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.