எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த நடைமுறை அறிவாற்றல் இல்லாதவர்: ஸ்டாலின் மீது தமிழிசை கடும் விமர்சனம்
எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் நடைமுறை குறித்த அறிவாற்றல் இல்லாதவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மீது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் நடைமுறை குறித்த அறிவாற்றல் இல்லாதவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மீது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாரதப்பிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்றபோது இந்தியாவில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை 7 மட்டுமே மாநிலத்திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்க வேண்டும் என்பதே மோடி அரசின் குறிக்கோள் இந்த வரிசையில் 13 மாநிலங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்ட அனுமதியுடன் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கும் முன் உள்ள நடைமுறைகள் - முதலில் மாநில அரசு தகுந்த இடத்தை அடையாளம் காண்பித்து அதை மத்திய அரசின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும், இதற்கான நிதி ஆதாரம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டு பின்னரே ஆரம்ப பணிகள் துவங்கும். ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி செயல் வடிவம் பெற குறைந்தது 4வருடங்களாகும்.
அதற்குமுன் பூர்வாங்க பணிகள் நடைமுறைகள் அரசு விதிகளின் படி சுமார் 2 அல்லது3 ஆண்டுகளாகும். உதாரணத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் சுஷ்மா சுவராஜ் அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராகவும் திமுகவின் A.ராஜா அவர்கள் இணை சுகாதாரத்துறை அமைச்சராகவும்இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் சத்தீஸ்கர்,ஒரிசா,உத்தரகாண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போதுதான் முழுமையாக இயங்கிவருகின்றன.திமுகவின் A.ராஜா அவர்கள் இணை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பே இப்போதுதான் இறுதி வடிவம் பெறுகின்றது. இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை நடைமுறை சாத்தியம்.
இந்த அடிப்படை விவரம் புரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏன் தாமதம் என்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதாக சொல்வது பொய்,பித்தலாட்டம் என்று கூறினார்.இப்போது ஏன் தாமதம் என்கிறார் இப்படிப்பட்ட நடைமுறை அறிவாற்றல் இல்லாதவரை (எதிர்கட்சி தலைவரை இப்படி அழைப்பது சரியா?) நம் பாரதப் பிரதமரை முட்டாள் என்று அழைப்பவரை வேறு எப்படி அழைப்பது.இதுதான் அவர் சார்ந்த இயக்கத்தின் அரசியல் தராதரம்.தமிழக மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள் .
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.