கட்சிக்கு நிலையான சின்னம் பெற்ற பிறகே தேர்தலில் போட்டியிடுவோம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அமமுக, அதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி திமுக அல்லது அதிமுகவில் இணைவது போன்ற பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்று தினகரன் அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் நாம் நினைப்பது போல் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார் தினகரன்.
இது குறித்து கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமமுகவில் இருந்து சில நிர்வாகிகள் சுயநலத்துடன் வேறு கட்சிக்கு செல்வதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை மறைக்கும் வகையிலேயே அதிமுகவினர், அமமுகவிலிருந்து நிர்வாகிகளை இழுத்து வருகின்றனர்.
கட்சி நிர்வாகிகளை அவர்கள் மீதுள்ள பழைய வழக்குகளைக் காரணம்காட்டி வற்புறுத்தியும், காவல் துறை மூலமாக மிரட்டியும் (அதிமுகவுக்கு) இழுத்துச் செல்கின்றனர்.
எங்களது கட்சியை பதிவு செய்யும் பணி முடிவடையவில்லை. வேலூர் மக்களவைத் தொகுதி, விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல்களும் நடைபெற உள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். கட்சியைப் பதிவு செய்த பின்னர் நிலையான சின்னத்தைப் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம் என்றார் தினகரன்.