சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பற்றி இன்று தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொன்.மாணிக்கவேல் குறித்து திமுக எம்எல்ஏ ஐ. பெரியசாமி விவாதம் நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பொன். மாணிக்கவேல் மீது அரசுக்கு ஈகோ. தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதால் அவர் மீது அரசுக்கு ஈகோ ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.
அதனால்தான் அவரது விசாரணைக்கு அரசு சரியான ஒத்துழைப்பு அளிப்பதில்லை. சிறந்த அதிகாரியாக விளங்கும் பொன். மாணிக்கவேலின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து தமிழக அரசு நடுநிலையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருக்கும் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை திருப்பிக் கொடுப்பதாக சொல்லியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, சிலை கடத்தல் பிரிவுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேலுக்கு அனைத்து ஒத்துழைப்பும் அரசு வழங்கியது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், 2012ம் ஆண்டில் இருந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பொன். மாணிக்கவேல் நீடிக்கிறார். இதுவரை 33 வழக்குகள் மட்டுமே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், ஆண்டுக்கு சராசரியாக 4 வழக்குகள் தான் பதிவாகியுள்ளன. இதில் 7 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது என்றும் அவையில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.