எதிரிகளுடனான போரின் போது ஒரு வீரர் வீர மரணம் அடைவதுது வெறும் வருத்தப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல, அதற்கும் மேல் என்று கூறுகிறார் சாருலதா ஆச்சர்யா.
இவர் மகா வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் பத்மபானி ஆச்சர்யாவின் மனைவி. மேஜர் பத்மபானி போரில் வீர மரணம் அடையும் போது, சாருலதா 6 மாத கர்ப்பிணி.
போரின் போது இந்திய வீரர்கள் வீர மரணம் அடைகின்றனர். அவர்களை இந்திய ராணுவம் இழப்பது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால், ஒரு வீரர் மரணம் அடையும் போது, அவரது குடும்பம் எல்லாவற்றையும் இழக்கிறது. எனக்கும் அதே தான் நடந்தது. எனக்கு நடந்த விஷயம் யாருக்குமே நடக்கக் கூடாது என்றுதான் எப்போதும் பிரார்த்திப்பேன். ஆனால் அப்படி நடக்காமல் இருக்குமா? அப்படி நடக்கும் போது அந்தக் குடும்பத்துக்கு மிக முக்கிய தேவை, ஒரு தோள். அது நானாக இருக்க விரும்பினேன்.
பல குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கும் கையாக செயல்பட்டு வருகிறார் சாருலதா. தற்போது இவர் தனி ஆள் கிடையாது. ஒரு குழுவே செயல்படுகிறது. இதுபோன்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும், பொதுமக்களில் சிலரும் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.
இந்த குழுவின் பெயர் 'தேசம்'. அது எந்த அங்கீகாரமும் இல்லாமல் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அமைப்பாகும். போரில் வீர மரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தினர் சாய்ந்து அழ ஒரு தோளாகவும், கண்ணீர் விடும் போது துடைத்துவிடும் கையாகவும் நாங்கள் செயல்படுகிறோம் என்கிறார்.
2014ம் ஆண்டு லெப்டினல் கர்னல் சங்கல்ப் குமார் வீர மரணம் அடைந்த போது, அவரது மனைவி பிரியாவை முதல் முறையாகப் பார்க்கும் போது நெஞ்சம் வலித்தது. ஆனால், அந்த சூழ்நிலையை அவர் மிக தைரியமாகக் கையாண்டார். தற்போது அவர் குடும்பத்தை மட்டுமல்ல, தன்னையும் நன்கு மேம்படுத்திக் கொண்டு வளர்த்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
குடும்பத்துக்கு எல்லாமுமாக இருந்தவர்களை இழந்து வாடும் போது அவர்களுக்குத் தேவை ஒரு ஆறுதல். அது தக்க சமயத்தில் கிடைத்துவிட்டால், எந்த துயரையும் துடைத்துவிட முடியும். ஒரு ராணுவ வீரரை இழந்த பிறகு, அவர்களது மனைவிகள்தான் அந்த குடும்பத்தின் எல்லாமுமாக மாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற்கு நிச்சயம் ஒரு தோள் தேவை. அந்த தோளாக நாங்கள் செயல்படுகிறோம் என்கிறார் பெருமிதத்தோடு சாருலதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.