தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிதான் தொடரும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேலூரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின்போது, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளைத்தான் கூறி வருகிறார். கடந்த தேர்தலின்போது நகைக் கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறினார். அவ்வாறு நகைக் கடனை தள்ளுபடி செய்வது என்றால் ரூ. 1.5 லட்சம் கோடி தேவை. அதற்கு நிதி ஆதாரம் இடம் கொடுக்குமா என்பது குறித்து திட்டமிடாமலேயே மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ. 7 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றனர். ஆனால், ரூ. 1,500 கோடிதான் தள்ளுபடி செய்தனர். அந்தவகையில், செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டிலும் அதிமுக அரசு தான் தொடரும். ஸ்டாலின் என்ன செய்தாலும் அவரால் முதல்வர் பதவிக்கு வரமுடியாது. அதிமுக திராவிட கொள்கையில் இருந்து மாறாது.
மேலும், மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் எப்போதும் அதிமுக ஈடுபடாது. தேர்தல் பிரசாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். திமுகதான் இரட்டை வேடம் போடும் கட்சி. இடத்துக்கு இடம் மாறக் கூடியது என்றார்.