மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை: ஸ்டாலின் பெருமிதம்
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நம்முடைய தமிழகத்து மக்கள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நம்முடைய தமிழகத்து மக்கள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற ரமலான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:
ஒவ்வொரு ஆண்டும் கொளத்தூர் தொகுதியில், இஸ்லாமியர்களின் புனிதத் திருநாளாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய புனித ரமலான் நிகழ்ச்சிக்கு நான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றேன்.
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டிருந்தாலும் இந்த முறை உங்களுக்கு புனித ரமலான் வாழ்த்து சொல்ல மட்டுமல்ல, நடந்து முடிந்திருக்கக்கூடிய தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த உங்களுக்கு நன்றி சொல்லவும் வந்திருக்கின்றேன்.
இந்தியா முழுவதும் நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலைப் பொறுத்தவரையில், நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவெறி பிடித்தவர்களுக்கு மதத்தை வைத்து அரசியல் நடத்திட வேண்டும் என்ற உணர்வோடு, அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்ற அவர்களுக்கு, மதத்தைப் பிரித்து அதன் மூலம் அரசியல் லாபம் தேடலாம் என்று கருதி கொண்டிருப்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் அவர்களுக்கு நிச்சயமாக இடம் இல்லை என்பதை நம்முடைய தமிழகத்து மக்கள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றார்கள்.
அதிலே, குறிப்பாக இந்த கொளத்தூர் தொகுதியும் அடங்கி இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது எனக்கும் பெருமை.
இவ்வாறு அவர் பேசினார்.