முகப்பு
தமிழ்நாடு

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு அரசுப் பணி ஆணை! 

தவறுதலாக கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால், நோய் தொற்றுக்கு ஆளாகி, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தையைப் பெற்றெடுத்த சாத்தூர் பெண்ணுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூன், 2019 at 4:03 PM
பகிர்:

தவறுதலாக கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால், நோய் தொற்றுக்கு ஆளாகி, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தையைப் பெற்றெடுத்த சாத்தூர் பெண்ணுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 6ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், சாத்தூர் பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்குமாறு மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரத் துறை இயக்குநருக்கு, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு, பணி ஆணை பெற்ற சாத்தூர் பெண், இந்த வார இறுதிக்குள் பணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறை மாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. 

இதனையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, குறிப்பாக வயிற்றில் உள்ள குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜனவரி 17-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நோய் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதிய நிலையில், பிறந்து 45 நாள்களுக்குப் பிறகு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு அறிவித்தபடி இன்னும் ஒரு சில மாதங்களில் அவருக்கு புதிய வீடு கட்டித்தரப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.