சென்னை: தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு தண்ணீர் வழங்க தயார் என்று இன்று (20.06.2019) கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராய் விஜயன் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியை பார்த்தவுடன், கழகத் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக கேரள மாநில முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததுடன் தமிழகத்திற்கு தண்ணீர் தந்து உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவின் அடிப்படையில் தமிழக மக்களின் தாகத்தை தீர்க்க கேரள மாநில முதல்வர் அளிக்க முன்வந்துள்ள தண்ணீரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாகவும் கேரள மாநில முதல்வர் அவர்களிடம் கழகத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.