சென்னை: மோடி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை எதிர்கட்சியினருக்கு எதிராக ஏவி விடுகிறார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முன்னாள் அமைச்சரும்,தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் வீட்டிலும்,அவரது மகனுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் நேற்றைய முன்தினம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார். தேர்தல் நேரத்தில் நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளையும்,அதன் தலைவர்களையும், வேட்பாளர்களையும், ஊழியர் களையும், மிரட்டும் வகையில் செயல்படுகிறார்.
பழிவாங்கும், அச்சுறுத்தும் நோக்கிலும் ,மோடி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை எதிர்கட்சியினருக்கு எதிராக ஏவி விடுகிறார்.
அவர் ஒரு காவந்து பிரதமர் என்பதை மறந்து விட்டு , வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.
மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத பாசிசப் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.