வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் இடையிலான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் ஒரு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும், வீடுகளை வாடகைக்கு விடுவது, பயன்படுத்துவதில் ஏற்படும் சச்சரவுகளை தடுக்க, தற்போதைய சூழலுக்கு ஏற்ப, புதிய மாதிரி சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.
இதன்படி, தமிழகத்துக்கான வாடகை வீட்டு வசதி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான, வரைவு விதிகள் தயாரிப்பு மற்றும் அவற்றை செயல்படுத்தும் நடைமுறை களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் இறுதி செய்தனர்.
இதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், இதற்கான ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அவை, ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்படும். இதற்காக, வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர், முகவரி, வீட்டின் அளவு, வாடகைக்கு விடப்பட்ட விவரம் உள்ளிட்ட தகவல்களை ஆணையத்துக்கும், வாடகைதாரருக்கும் தெரிவிக்க வேண்டும்.
இந்த புதிய சட்டத்தின்படி வீட்டு உரிமையாளர் வாடகைதாரர் இடையிலான வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும் 32 நீதிமன்றங்களை அமைக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னையில் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே வாடகை தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும். வாடகை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் தகராறு, பிரச்னைகளுக்கு இந்த நீதிமன்றங்கள் தீர்வுகாணும். நீதிபதிகள் பொறுப்பேற்றதும் இந்த நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கும்.
இந்த நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், பிரதான தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
சிவில் நீதிமன்றங்களுக்கான நடைமுறை மற்றும் அதிகாரத்துடன் வாடகை விவகார நீதிமன்றங்களும், தீர்ப்பாயமும் செயல்படும்.