முகப்பு
தமிழ்நாடு

கோடையைச் சமாளிக்க குளிர்ச்சியான மூலிகை நீர்!

கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உதவியாக, புதுச்சேரியில் குளிர்ச்சியான மூலிகை நீர் விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:00 AM
பகிர்:

கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உதவியாக, புதுச்சேரியில் குளிர்ச்சியான மூலிகை நீர் விற்பனை செய்யப்படுகிறது.
 தற்போது கோடை வெப்பம் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்பத்தால் பலருக்கும் வெப்பம் சார்ந்த தலைவலி, வயிற்றுப் போக்கு, செரிமானப் பிரச்னை, உடல் - கண் எரிச்சல், சிறுநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
 கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க இளநீர், நொங்கு, தர்பூசணி, பழச்சாறுகள் என வழக்கமான தீர்வை மேற்கொள்கிறோம். புதுச்சேரி லாசுப்பேட்டை நெடுஞ்சாலை பாக்கமுடையான்பட்டு பகுதியைச் சேர்ந்த ராசி.ராமலிங்கம் (65), கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைத் தணிக்க நன்னாரி, வல்லாரை உள்ளிட்ட இயற்கை மூலிகைகளைக் கொண்டு, "கூல் டி' என்ற குளிர்ச்சியான மூலிகை நீரை குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த மூலிகை நீரை ஒரு வேலைக்கு 5 சொட்டுகள் என்ற வீதத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து குடித்தால், வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கும் தீர்வு காணலாம் என்கிறார் அவர்.
 மூலிகை நீர் மட்டுமன்றி, பல்வேறு இயற்கைப் பொருள்களைத் தயாரிக்கும் கூடத்தையும் அவர் நடத்தி வருகிறார். மேலும், பலருக்கு இலவசமாக இயற்கைப் பொருள்களைத் தயாரிக்கும் முறைகள் குறித்தும் பயிற்சியளித்து வருகிறார்.
 குளிர்ச்சியான மூலிகை நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ராசி.ராமலிங்கம் கூறியதாவது:
 இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மூலிகை நீரைக் குடித்தால், நாவறட்சி நீங்கும். உடல் சூட்டைத் தணிக்கும். இதனால், உடல் உறுப்புகள் இயல்பாக இயங்கும். நீர்க்கடுப்பு, வேர்க்குரு, தலைவலி, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு வராமல் தடுக்கும். கண் பார்வை மேம்படும். கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளைத் தடுக்கும்.
 சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். பித்தப்பை கல்லையும் கரைக்கும் ஆற்றல் வாய்ந்தது. மூளை நரம்புகள் பலப்படும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் சீர்படும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சிறுநீர் பிரச்னைகளை அகற்றும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →