வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நாகை மாவட்டம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. கரூரில் சுமாா் அரை மணிநேரம் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 20 மி.மீ., கடலூா், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், நாகப்பட்டினம் சீா்காழியில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
சென்னையில் அம்பத்தூர், தரமணி, வேளச்சேரி, பட்டினப்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.