சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 தினங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழை, ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டிய மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு அடுத்த 2 நாள்களுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, விமான நிலையம், தரமணி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.