தமிழகப் பொருளாதாரத்தில் கட்டுமானத் துறையின் பங்கு 30 சதவீதம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழகப் பொருளாதாரத்தில் 30 சதவீத பங்கு கட்டுமானத் துறையைச் சார்ந்திருப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் இந்திய தொழில் மற்றும்
தமிழகப் பொருளாதாரத்தில் 30 சதவீத பங்கு கட்டுமானத் துறையைச் சார்ந்திருப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் கட்டுமானத்துறையில் சாதித்தவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். சுமார் 11 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் அவர் பேசியது: இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழகம். சுமார் 2.61 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடாக தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இவை 2018-19 -ஆண்டுகளில், இந்திய அளவில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் 5.9 சதவீதமாகும். தற்போது ஆட்டோ மொபைல் துறையில் சரிவு ஏற்பட்டாலும், தமிழகத்தில் பொருளாதாரச் சரிவு இல்லை. காரணம் தமிழக பொருளாதாரம் தொன்மை வாய்ந்தது. அது ஒரு துறையை மட்டும் சார்ந்து இயங்குவதில்லை. 2023 -ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்குவதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. இதற்காக 13.91 லட்சம் குடும்பங்களுக்கு வீடு தேவை என கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்குத் தேவையான மானியம் வழங்கி வீடு கட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக, தமிழக பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. மாநில பொருளாதாரத்தில் கட்டுமானத் துறையின் பங்கு 30 சதவீதம் என்றார் அவர்.
தொடர்ந்து இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் அனராக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தளம் சென்னையில் எதிர்காலத்தை வலுப்படுத்துகிறது (Chennai-Driven by Diversified Economic Base- Reinforcing the Future) என்ற ஆங்கில சிறப்பு மலர் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஃபி டேபிள் புத்தகம் ஆகியவற்றை அவர் வெளியிட்டார்.
முன்னதாக, கட்டுமானத்துறையில் காத்திருக்கும் பெரிய வாய்ப்புகள், கட்டுமானத் துறையில் வளர்ந்து வரும் நிதி வாய்ப்புகள், சந்தையில் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வு உள்ளிட்ட அமர்வுகளின் கீழ் சிறப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதில், எச்டிஎப்சி, ஒலிம்பியா, டாடா, நெஸ்டவே உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்வில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச்செயலர் ராஜேஷ் லக்கானி, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தமிழகத்தலைவர் வி.கவிதா தத், இந்திரா பிராஜக்ட் நிறுவனத் தலைவர் புபேஷ் நாகராஜன், க்ரெடாய் தலைவர் டபிள்யு. எஸ். ஹாபிப், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவர் (விளம்பரப் பிரிவு) ஜே. விக்னேஷ் குமார், அனராக் குழுமத் தலைவர் அனுஜ் புரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.