சென்னை: எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா? என்று மக்கள் நீதி மன்றம் தலைவர் கமல் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என்று பதிவிட்டு ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
கமல் வெளியிட்டிருக்கும் விடியோவில், எங்கு பேனர் வைக்க வேண்டும், எங்கு பேனர் வைக்கக் கூடாது என்பது கூடவா அதிகாரிகளுக்குத் தெரியாது.
எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா?
அரசாங்கத்தின் அலட்சியத்தால் எத்தனை ரகுக்கள், எத்தனை சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தவறைத் தட்டிக் கேட்காமல் மக்கள் இருப்பது பைத்தியக்காரத்தனம். அரைவேக்காடு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகிறதோ? என்று கமல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.