ஈரோடு ரயில்நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தனி ரயில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை கரோனா வார்டுகளாக மாற்றும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தென்னக ரயில்வே சார்பில் மட்டும் 573 பெட்டிகள் வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு ரயில்வே பணிமனையில் 20 பெட்டிகள் கொண்ட ரயில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 8 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும். இது தவிர மருத்துவர்கள், நர்ஸ்கள், மருந்துகள் வைக்கவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஈரோட்டில் உள்ள ரயில் மூலம் 150 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்றும், எந்த பகுதிக்கும் இந்த ரயிலைக் கொண்டு செல்ல முடியும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.