முகப்பு
தமிழ்நாடு

தாய், தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் கைது

பெரம்பலூர் அருகே தாய், தந்தையை வெட்டிக் கொலை செய்த மனநலன் பாதிக்கப்பட்ட மகனை பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

பெரம்பலூர் அருகே தாய், தந்தையை வெட்டிக் கொலை செய்த மனநலன் பாதிக்கப்பட்ட மகனை பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). பி.ஏ பட்டதாரியான இவர், விபத்து ஒன்றில் சிக்கியதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வலது காலை இழந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்த ரமேஷ் சற்று மனநலன் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதனால், தனது, தாய் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை இரவு ரமேஷ் தனது தந்தை ராமசாமி (65), தாய் செல்லம்மாள் (60) ஆகியோரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, இருவரது உடலையும் தனித்தனியாக சாக்கு மூட்டையில் கட்டி, வீட்டின் தனித்தனி அறையில் வைத்துவிட்டு, மாடியில் ஏறி அரிவாளுடன் அமர்ந்து கொண்டார்.

வியாழக்கிழமை காலையில், அவ்வழியேச் சென்ற பொதுமக்களை பார்த்து, மாடியில் நின்றபடி அரிவாளை காட்டி அருகில் வந்தால் வெட்டிக் கொலை செய்து விடுவதாகக் கூறி ரமேஷ் மிரட்டினார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பெரம்பலூர் காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்லூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.