ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தியின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 25ஆம் தேதி துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹத்துவா மாவட்டத்தில் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் சீரிய பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் எஸ்.திருமூர்த்தி வீரமரணம் அடைந்தார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். தனது 21-வது வயதில் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து - தற்போது ஹவில்தாராக - தியாக உணர்வுடன் பணியாற்றிய அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.