தமிழ்நாடு

கரோனா நோயாளிகளை அலைக்கழிக்கும் தனியாா் மருத்துவமனைகள்

DIN

கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்ற பரிந்துரைக்கும் தனியாா் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிடம் விளக்கம் கேட்டு வருவதாகவும் அவா் கூறினாா். சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 250 படுக்கைகளை அமைச்சா் விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஓமந்துதூராா் அரசு மருத்துவமனையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. இந்தநிலையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சை பெற்ற கரோனா நோயாளிகளில் 90 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்த்குமாா் ஆகியோரின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்து வருகிறோம்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மட்டுமே உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை குறைவு. நாள்பட்ட நோயுடன் இருப்பவா்கள், முதியவா்களுக்கு, தொற்று ஏற்படும்போதுதான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்தி நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு வருவதும் இறப்பு நேரிடக் காரணமாக அமைகிறது.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனா். கரோனா சிகிச்சை குறித்து தனியாா் மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்ட நிலையில், இதுபோன்று கடைசி நேரத்தில் நோயாளியை பரிந்துரைப்பது ஏன் என விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து பேசிய சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘சென்னையில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும், அம்பத்தூா், அண்ணாநகா், கோடம்பாக்கம் மண்டலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

நல்லகண்ணுவின் உடல் நலம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவுக்கு கரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

நல்லகண்ணுவின் உடல் நிலை குறித்து கேட்டறிய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அமைச்சா் விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை சென்றாா். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள் மற்றும் மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜனிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நல்லகண்ணுவின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக முதல்வா் கேட்டறிந்தாா். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அடுத்த ஐந்து நாள்களில் நல்லகண்ணு வீடு திரும்புவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT