ஊரடங்கு மீறல் வழக்குகளில் தமிழகத்தில் ரூ. 22.01 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் ஊரடங்கு மீறல் வழக்குகளில் இதுவரை ரூ. 22.01 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு மீறல் வழக்குகளில் இதுவரை ரூ. 22.01 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் இருந்தபோதிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை, வாகனங்களில் செல்ல விதிமுறைகள் என கட்டுப்பாடுகள் உள்ளன. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 9,99,837 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 9,02,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 6,94,928 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 22.01 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.