முகப்பு
தமிழ்நாடு

நிவர் புயலால் மின் வாரியத்துக்கு ரூ 64 கோடி இழப்பு: அமைச்சர் தங்கமணி

தமிழகத்தை தாக்கிய நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வியாழக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கும் அமைச்சர் பி.தங்கமணி
பகிர்:

நாமக்கல்: தமிழகத்தை தாக்கிய நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வியாழக்கிழமை தெரிவித்தார்.

நாமக்கல்லில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி,  சமூக நலத்துறை அமைச்சர் வெ. சரோஜா ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல்- திருச்சி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே இது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ரூ 15 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் தொடங்கியுள்ளன. 

நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு இதுவரை ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புயல்களின் தாக்கம் இருப்பதால் அதுதொடர்பாக ஏற்படும் இழப்புகளை கணக்கிட வேண்டியதும் உள்ளது. பள்ளிபாளையத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவி பாதிக்கப்படவில்லை. அவர் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது கைப்பட்டதால் மின்சாரம் தாக்கி உள்ளது. அதனால் தான் அவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார வாரியம் மூலமும் நிதி உதவி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், எம்.எல்.ஏ. கே.பி.பி பாஸ்கர், முதன்மைக் கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.