புதுச்சேரியில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் நாளையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் நாளையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
'புரெவி' புயல் காரணமாக, புதுச்சேரியில் புதன்கிழமை முதலே விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், வியாழக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 76.2 மி.மீ. மழை பதிவானது. வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை 24 மி.மீ. மழை பதிவானது.
இதனால், இந்திரா காந்தி சிலை சதுக்கம், பாவாணா் நகா், நடேசன் நகா் பகுதியில் சாலைகளில் மழை நீா் தேங்கியது. கிருஷ்ணா நகா், வெங்கட்டா நகா், சுதந்திர பொன்விழா நகா் வீதிகளில் மழை நீா் தேங்கியது. மழை நீடிக்கும் நிலையில், வீடுகளுக்குள் மழை நீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையால் மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.
இதனிடையே தொடர் மழையால் இன்று (டிச.4) விடுமுறை அறிவித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அ.மைக்கேல் பெனோ உத்தரவிட்டுள்ள நிலையில், நாளையும் (டிச.5) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.