கூத்தாநல்லூர்: 218 வீடுகள் சேதம்;16 முகாம்களில் 4,344 பேர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்தில் 218 வீடுகள் இடிந்து விழுந்து, 16 முகாம்களில் 4,344 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்தில் 218 வீடுகள் இடிந்து விழுந்து, 16 முகாம்களில் 4,344 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூத்தாநல்லூர் வட்டத்தில் தொடர் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா, பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள், நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் ஆய்வு செய்து பாதுகாப்புப் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜீவானந்தம், வருவாய் ஆய்வாளர்கள் இளமாறன், பன்னீர்செல்வம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு, பகல் பாராது பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து, வட்டாட்சியர் ஜீவானந்தம் கூறியது: கூத்தாநல்லூர் வட்டத்தில், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் மற்றும் கமலாபுரம் உள்ளிட்ட 3 பிர்காவிலும், நேற்று சனிக்கிழமை வரை கனமழை காரணமாக 218 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
கூத்தாநல்லூர் பிர்காவில் சித்தாம்பூர், ஆய்குடி, சேகரை, அதங்குடி, ஓகைப் பேரையூர், வெள்ளக்குடி என 6 இடங்கள், வடபாதிமங்கலம் பிர்காவில் மாவட்டக் குடி, குலமாணிக்கம் இராமநாதபுரம், திருநெல்லிக்காவல், பாலக்குறிச்சி மற்றும் புள்ளமங்கலம் உள்ளிட்ட 5 இடங்கள், கமலாபுரம் பிர்காவில் நட்டுவாக்குடி, நாலில் ஒன்று, விடயபுரம், அத்திச்சோழமங்கலம், முசிறியம் மற்றும் ஆய்குடி 1 உள்ளிட்ட 6 இடங்கள் என மொத்தம் 16 இடங்களில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 16 முகாம்களிலும் 4,344 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், 2 மாடுகள், 8 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி என 11 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தொடர்ந்து, அனைத்து இடங்களையும் பார்வையிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.