சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அனுமதி பெற்ற தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடகத்தினர், கூட்டம் இல்லாத நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு புறநகர் ரயில்களில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, கல்லூரி மாணவர்களுக்கும் புறநகர் ரயிலில் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
'இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.