தருமபுரி அருகே கார்கள் மீது லாரி மோதி விபத்து: நால்வர் பலி
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டை சுமை ஏற்றிய லாரி ஒன்று சனிக்கிழமை பிற்பகல் தருமபுரியைக் கடந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த லாரியின் பிரேக் பழுதானது.
இதையும் படிக்கலாமே.. வீணாகும் உணவை சேகரித்து தினமும் 2,000 பேருக்கு உணவளிக்கும் இளைஞர்
ஏற்கெனவே தொப்பூர் அருகே நடந்திருந்த சிறு விபத்து காரணமாக அந்த வழியில் போக்குவரத்து தேக்கமடைந்து வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், பிரேக் பழுதான லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள், சிறிய சரக்கு வாகனம் என சுமார் 10 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணித்தவர்களில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் தொப்பூர் அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொப்பூர் காவல்துறையினர், பாளையம் சுங்கக் சாவடி பணியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. விபத்தால் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச.ப. கார்த்திகா நேரில் சென்று பார்வையிட்டார்.