முகப்பு
தமிழ்நாடு

நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? கமல்ஹாசன் கேள்வி 

நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)
பகிர்:

நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
தில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்பவுள்ளதாக மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அறிவித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கை கடந்த 6ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய கட்டடம் கட்டுவதற்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்த அனுமதி அளித்தது. 
இத்தகைய சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கா்நாடகத்தின் சிருங்கேரி மடத்தைச் சோ்ந்த பூஜாரிகள், பூமி பூஜைக்கான சம்பிரதாயங்களை மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து, புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, சா்வமத வழிபாடும் நடைபெற்றது. 
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், வரும் 2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது சுட்டுரையில், சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  
பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.