முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடுமுதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் கட்டணம் நிர்ணயித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் கட்டண உச்சவரம்பை நிர்ணயித்து தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த தொகை மிக குறைவாக இருப்பதாகக் கூறி, இந்திய தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் சார்பில் அதன் தமிழ்நாடு பிரிவு இணைச் செயலாளர் அடெல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.
அந்த மனுவில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான செலவுகளின் அடிப்படையில் கணக்கிட்டு நிர்ணயிக்கப்படவில்லை. மருத்துவமனைகளுடன் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்படவில்லை.
கரோனா சிகிச்சையைப் பொருத்தவரை 5 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பரிசோதனைக் கருவியின் விலை ரூ. 3 ஆயிரமாகும். மருத்துவமனை அறைகளின் வாடகை ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1,500 வரை உள்ளது. 100 படுக்கை கொண்ட மருத்துவமனைகளுக்கு 200 முழு உடல் கவசங்கள் தேவைப்படும். அவற்றின் விலை ரூ. 750 முதல் ரூ.1,000 வரை உள்ளது. ரூ 500 முதல் ரூ. 1000 வரை மருந்துகளின் விலை உள்ளது.
தன்னிச்சையாக பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான கட்டணங்களை முறையாக கணக்கிட்டு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். கடந்த 2017-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உண்மையான செலவுகளின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக தமிழக அரசு வரும் ஜனவரி 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.