மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து சாலையில் ஓட்டிவந்த போலீஸார்
திருவள்ளூர் அருகே ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸார் சீருடையில் சாலையில் ஓட்டி வந்து அசத்தினர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸார் சீருடையில் சாலையில் ஓட்டி வந்து அசத்தினர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே ராமதண்டலம் கிராமத்தில் ஏரி வரத்துக் கால்வாய்களிலும், கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் ராமதண்டலம் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் வெள்ளிக்கழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீஸாரைப் பார்த்தும் மாட்டு வண்டியை எடுத்துச் செல்லப் போகிறார்கள் என திருட்டு மணலுடன் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து மணல் அள்ளிய நிலையில் மாட்டு வண்டியை 2 போலீஸாரும் சீருடையில் திருவள்ளூர்-பூண்டி சாலையில் 10 கி.மீ தூரம் ஓட்டிக் கொண்டு புல்லரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதை சாலையில் வாகனங்களில் சென்றோர் மாட்டு வண்டியை ஓட்டி வரும் போலீஸார்களை ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.