சிலிண்டர் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர்: சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 50 ஆவது வார்டு பட்டுக்கோட்டையார் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு கிளைச் செயலாளர் அ.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண்கள் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமைத்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை விலையை கடுமையாக உயர்த்தியுள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே,சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர், தலைமை மண்டலக்குழு உறுப்பினர் எம்.பஞ்சவர்ணம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.