முகப்பு
தமிழ்நாடு

ஓட்டுக்காக பொங்கல் பரிசு அறிவிக்கவில்லை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஓட்டுக்காக பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசுகிறார் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

பல்லடம்: ஓட்டுக்காக பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த பெருந்தொழுவு, பொல்லிக்காளிபாளையம், கணபதிபாளையம் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் வரவேற்றார்.

இவ்விழாவில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இவ்விழாவில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் அலகுமலை சண்முகம், பொங்கலூர் முன்னாள் ஒன்றிய தலைவர் சிவாச்சலம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ரேவதி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ.சித்துராஜ்,சொக்கப்பன், ஏ.எம்.ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் யு.எஸ்.பழனிசாமி, வி.ஹரிகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், 'முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் மக்களிடம் மகத்தான வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை போல் கால்நடைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விரும்புகிறார். அதனால் தான் 40 கால்நடை கிளை நிலையங்கள், 25 மருந்தகங்கள், 5 மருத்துவமனைகள், 3 பன்நோக்கு கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க அனுமதி அளித்துள்ளார்.

வரும் 27ம் தேதி உடுமலையில் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டடம் அமைக்க பூமி பூஜை நடக்கிறது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கவுள்ளார். ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா சேலம் தலைவாசலில் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. வரும் தை மாதத்தில் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

மக்களுக்கு என்ன தேவை என்று அதற்கேற்ப திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். அதனால் அவரது ஆட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த ஆண்டு தை பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பொங்கல் பரிசை மக்களுக்கு வழங்கியது. அது போல் இந்த ஆண்டும் வழங்குகிறது. அடுத்து 2022ம் ஆண்டும் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி தான் வழங்குவார்.ஓட்டுக்காக இந்த ஆண்டு மட்டும் பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை ஆண்டு தோறும் பொங்கல் பரிசை அதிமுக அரசு வழங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.