கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்( 49). இவர் ரயில் தண்டவாளத்தை பராமரிக்கும் கேங்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை வழக்கம்போல் விழுப்புரம்- விருத்தாச்சலம் ரயில்வே மார்க்கத்தில் இரவு பணி மேற்கொண்ட ஜெயபால், சனிக்கிழமை அதிகாலை, விழுப்புரம்-விருத்தாசலம் இடையே உளுந்தூர்பேட்டையை அடுத்த பாதூர் காந்திநகர் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடந்தார்.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் ரயில்வே போலீசார்.
விசாரித்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும், சென்னை நோக்கி சென்ற செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே நேரத்தில், பாதூர் பகுதியில் கடந்துசென்றபோது, எதிர்பாராத விதமாக ஜெயபால் மீது ரயில் மோதி உள்ளது. இதில் உடல் நசுங்கிய நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, ஜெயபாலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.