சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.29) மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
டிச.30,31: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை (டிச.30) ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோல் வியாழக்கிழமையும் (டிச.31) சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.