முகப்பு
தற்போதைய செய்திகள்

சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரிய மேற்கு வங்க அரசு! நிராகரித்த குடியரசுத் தலைவர்!

சந்திக்க நேரம் ஒதுக்குமாறு மேற்கு வங்க அரசு வைத்த கோரிக்கையை குடியரசுத்தலைவர் நிராகரித்தது குறித்து...

Updated On : 13 மார்ச், 2026 at 6:28 AM
மமதா பானர்ஜி - திரெளபதி முர்மு
பகிர்:

மேற்கு வங்க அரசு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்க நேரம் கேட்டதாகவும் அதனை குடியரசுத்தலைவர் மாளிகை நிராகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரிணமூல் காங்கிரஸைச் சார்ந்த எம்.பி.க்கள் குழு, குடியரசுத் தலைவரை சந்தித்து மேற்கு வங்க அரசின் நலத்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக நேரம் கேட்டுள்ளனர். திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் மேற்கு வங்க எம்.பி.க்கள், மாநில அமைச்சர்கள் உள்பட 12 முதல் 15 பேர் கொண்ட குழு சந்திப்பதற்காக நேரம் தரக்கோரி குடியரசுத்தலைவருக்கு மார்ச் 9 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், குடியரசுத் தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரம் ஒதுக்கிவிட்டதால், நேரமின்மையைக் காரணம் காட்டி சந்திப்புக்கு நேரம் ஒதுக்க, குடியரசுத் தலைவர் மாளிகை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த மார்ச் 7 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் நிகழ்ச்சிக்காக வருகை தந்த குடியரசுத் தலைவரை வரவேற்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியோ, அமைச்சர்களோ செல்லாதது அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதேபோல், பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் பழங்குடியினர் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மாநில அதிகாரிகளால் இடம் மாற்றப்பட்டது குடியரசுத் தலைவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனத்தை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவருடன், மேற்கு வங்க மாநில அரசின் சந்திப்புக்கான கோரிக்கையை நிராகரித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

summary

Reports indicate that the West Bengal government requested time to meet President Draupadi Murmu, but the President rejected it.

முழு கட்டுரையைப் படிக்க →