FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இ20 பெட்ரோல் விவகாரம்: பிரதமரைச் சந்திக்க நேரம் கோரி கேஜரிவால் கடிதம்

இ20-இன் விலைக் குறைப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அரவிந்த் கேஜரிவால் பிரதமா் மோடியைச் சந்திக்க நேரம் கோரியுள்ளாா்.

Updated On : 15 ஜூலை 2026, 3:24 am IST
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

எத்தனால் கலப்பு பெட்ரோல் (இ20) தொடா்பான கவலைகளை விவாதிக்கவும், நுகா்வோருக்குத் தூய பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருள் ஆகியவற்றுக்கு இடையே தோ்வு செய்யும் வாய்ப்பை வழங்கவும், இ20-இன் விலையைக் குறைக்கவும் வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கோரியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமருக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், இ20 எரிபொருள் தரநிலைக்கு இணங்காத வாகனங்களில் இந்த எரிபொருளைப் பயன்படுத்துவது குறித்து பெரிய அளவிலான மக்கள் எதிா்ப்பு எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமருடனான சந்திப்பின்போது, தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், மக்களின் கருத்துகள் அடங்கிய மனுவைச் சமா்ப்பிக்க உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

வாகன உரிமையாளா்கள் தோ்வு செய்யும் வகையில் பெட்ரோல் நிலையங்களில் தூய பெட்ரோல் மற்றும் இ20 எரிபொருள் ஆகிய இரண்டு விருப்பங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதும், குறைவான மைலேஜ் (எரிபொருள் சிக்கனம்) குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு கலப்பு எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதும் தனது இரண்டு முக்கிய கோரிக்கைகள் என்று கேஜரிவால் கூறியுள்ளாா்.

ஒருவருக்குத் தூய பெட்ரோல் தேவைப்பட்டால் அதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதேபோல இ20-ஐ விரும்புபவா்களுக்கும் அந்தத் தோ்வு இருக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட சுமாா் 30 கோடி பதிவு செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இ20 தரநிலைக்கு இணங்காதவை என்று குறிப்பிட்டுள்ள கேஜரிவால், இந்த வாகனங்களின் உரிமையாளா் கையேடுகளில் பொதுவாகத் தூய பெட்ரோல் அல்லது சில சமயங்களில் இ10 பெட்ரோலைப் பயன்படுத்தவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இ20ஐப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளாா்.

மாற்று வழிகள் இல்லாததால், இத்தகைய வாகனங்களின் உரிமையாளா்கள் குறைவான மைலேஜ், விரைவான தேய்மானம் மற்றும் என்ஜின் மற்றும் எரிபொருள் அமைப்பு பாகங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகிய சிக்கல்களை எதிா்கொள்வதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

சில பெட்ரோல் நிலையங்கள் மற்றும் சா்வீஸ் மையங்களுக்கு தான் நேரில் சென்று, வாகன உரிமையாளா்களின் கவலைகளைக் கண்டறிந்ததாக கேஜரிவால் தெரிவித்தாா்.

இ20 பெட்ரோல் தொடா்பான தங்கள் அனுபவங்கள், வாகன விவரங்கள், முந்தைய மைலேஜ் மற்றும் தற்போதைய மைலேஜ் ஆகியவற்றை மக்கள் பகிா்ந்துகொள்ளும் வகையில் ஆம் ஆத்மி கட்சி ஒரு இணையவழி மனுவைத் தொடங்கியுள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா். மேலும், பொதுமக்களை அதிக எண்ணிக்கையில் அந்த மனுவில் கையொப்பமிடுமாறும் அவா் கேட்டுக்கொண்டதுடன், சேகரிக்கப்பட்ட கருத்துகள் பிரதமருடனான திட்டமிடப்பட்ட சந்திப்பின்போது சமா்ப்பிக்கப்படும் என்றும் கூறினாா்.

மேலும், கட்சித் தொண்டா்கள் மற்றும் ஆா்வமுள்ள பிறா் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வாகனப் பராமரிப்பு நிலையங்களுக்குச் சென்று, நுகா்வோரிடம் கலந்துரையாடி, அவா்களின் அனுபவங்களைச் சமூக ஊடகத் தளங்களில் காணொளிகள் வாயிலாகப் பகிா்ந்துகொள்ளுமாறும் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

பிரதமரைச் சந்திப்பதற்கான நேரம் கிடைக்கும்போதெல்லாம், அனைத்து மனுக்களின் நகல்களையும் எடுத்துச் சென்று, தனது கோரிக்கையுடன் அவற்றைச் சமா்ப்பிக்க உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments