மந்திரவாதி தாக்கியதில் பெண் சாவு: கணவர் கவலைக்கிடம்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - மூலனூர் சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவருடைய மனைவி ஈஸ்வரி (55). இவர்களுடைய மகன் உதயகுமார் (30). இவர் பல்லடம் செஞ்சேரிமலையில் பைனான்ஸ் வைத்துள்ளார்.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - மூலனூர் சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவருடைய மனைவி ஈஸ்வரி (55). இவர்களுடைய மகன் உதயகுமார் (30). இவர் பல்லடம் செஞ்சேரிமலையில் பைனான்ஸ் கடை வைத்துள்ளார்.
உதயகுமாருக்கு திருமணமாகி சில வருடங்களாக குழந்தை இல்லை. ஆறுமுகம் வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் ஃபர்னிச்சர் கடை வைத்துள்ளார். இந்நிலையில் குழந்தை வேண்டியும், தொழில் சிறக்கவும் மந்திரவாதி ஒருவர் மூலம் ஆறுமுகம் பரிகாரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
புதன்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் பரிகாரம் முடிந்து, கடையில் பரிகார பூஜை நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அறவே இல்லை. அப்போது மந்திரவாதி கடையிலிருந்த ஈஸ்வரி, ஆறுமுகம் இருவரையும் இரும்புக் கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி ஈஸ்வரி அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
கழுத்து அறுபட்டு ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறுமுகம் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.