புதுக்கோட்டை: எனது தலைமையில் தான் கூட்டணி. இதற்கு மேல் அரசியல் வியூகங்கள் எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட முடியாது என்றார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது:
ரஜினி ஹைதராபாத்தில் இருக்கும்போது பேசினேன். பரப்புரையில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. சென்னை திரும்பியதும் நேரில் சந்தித்துப் பேசுவேன்.
உடல் ஆரோக்கியத்தைக் காரணமாக வைத்து அவர் முடிவு எடுத்திருந்தால் அந்தக் கருத்தில் உடன்படுகிறேன். வேறு காரணம் ஏதும் இருக்குமா எனத் தெரியவில்லை.
தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நான் ஏற்கவில்லை. பாலியல் வன்முறைகளுக்கு, ஆண் என்ற லட்சணங்களையும் பெண் என்ற லட்சணங்களையும் மாற்றி சொல்லித்தர வேண்டும் என்பதுதான் தீர்வாக இருக்க முடியும். அதற்கேற்ப கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
தற்போது ஆட்சியில் இருப்பதால், தவறுகளைத் தடுக்க வேண்டும் என்பதால் அவர்களைப் பேசி வருகிறேன். அதற்காக திமுக செய்த தவறுகளை ஏற்பதாகவும் கிடையாது.
தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை விரும்பவில்லை. என்னை மீண்டும் மீண்டும் பாஜகவின் பி டீம் என்பதற்கு என் வாழ்க்கையே பதிலாக இருக்கும் என்றார் கமலஹாசன்.